தமிழவனுடன்மலையாள எழுத்தாளர்,எம்.கே.ஹரிக்குமார்

தமிழவனுடன்மலையாள எழுத்தாளர்,எம்.கே.ஹரிக்குமார்

 

மலையாள விமரிசகரும் எழுத்தாளருமான எம்.கே.ஹரிக்குமார் நடத்திய நேர்காணல் இது. (ezhuth online –இல், ஆங்கிலத்தில், 2011 – இல், பிரசுரமானது.)

 

  1. உங்கள் எழுத்துத் தத்துவம் எது?

பதில்: தன்னளவில் எனக்கு எழுத்து பற்றிய ஒரு தத்துவம் இல்லை, தத்துவம் என்று நீங்கள் சில விதிமுறைகளைக் கருதுவதாக இருந்தால், காம்யுவுக்கு எக்ஸிஸ்டென்ஷிய லிசம் என்ற ஒழுங்கான தத்துவம் இருந்ததுபோல், எனக்கு ஒரு தத்துவம் இல்லை. நான் கருதுகிறேன், என் போன்ற பல தமிழ் எழுத்தாளர்கள், எங்கள் சூழலால் பாதை காட்டப்படுகிறோம் என்று. என் சூழலில் நான் என்னை இழக்கிறேன். என் பின்னணியானது எழுந்து வந்து என் மூலம் எழுதுகிறது. என் பின்னணி என்று நான் சொல்லுவது எது என்று தெரிகிறதா, என் மொழியும் சமூகமும்.

 

அப்படிப்பார்த்தால் என் தத்துவம் என்பது நான் ஒருவித முனைப்பிலிருந்து என்னை விடுபட வைக்கிறேன் என்பதுதான். ஏனெனில் நாம், இன்று, மனிதர்கள் ஒருவித பின் – நவீன நிலமையில், சூழலில் நம்மை இழந்துள்ளோம். என் சூழல், மார்க்சியத்தையும் சமயத்தையும் மனித குலத்தின் கடைசிப் புகலிடமாகக் காட்டலாம். அவர்களுக்கு  மார்க்சீயக் கனவும் மதம் பற்றிய கனவும் (பிரமைகள்) இருந்தால். இந்த இரண்டு Motif – உம் என் நாவல்களிலும் (சில நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும்) விமரிசனக் கட்டுரைகளிலும் இருக்கும். நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது எல்லோருக்கும் உறுதியான தத்துவம் இருந்தது.

 

  1. எழுதுவது ஒரு விதியா?

பதில்: தமிழில் நாங்கள் எல்லோரும் பெரியாரால் உருவானவர்கள். எங்களுக்கு அவர் பிரச்சாரம் செய்தது ஒருவித மேற்கத்திய பகுத்தறிவுவாத தத்துவம் என்பது தெரியாதபடி வளர்ந்திருந்தாலும். நான் 40 வருடங்களாய் எழுதுவதை – அதை விதியால் எழுதுகிறேன் என்று சொல்வது சற்று பழைய சிந்தனை; அதுவும் என் எழுத்து, அதிகமும் சிறு இதழ்களில். பொதுவான தமிழ்வாசகர், எங்கள் மாதிரி எழுத்தை அறியமாட்டார். நான் 1982-இல் 365 பக்க நூலான ஸ்ட்ரக்சுரலிசம் எழுதினேன். அப்போது பல கலைச்சொற்களை உருவாக்குவது கடினமான வேலை. இப்போது தமிழ் விமர்சகர்கள் அதில் வந்த பல சொற்களை உபயோகிக் கிறார்கள். மலையாளம் போலன்றி, தமிழ் தன் பல மேல்சட்டை பாக்கெட்டுகளில், தன் எழுத்தாளர்களை ஒளித்து வைக்கிறது. பான்ட் பாக்கெட்டிலும் கூட – குழந்தைகள் இனிப்பை ஒளித்து வைப்பதுபோல. பல முக்கியமான தமிழ் எழுத்தாளர்களை வெகுவான தமிழர்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட நிலைமையில் எழுதுதல் என் விதி என்று எப்படிச் சொல்ல முடியும்? நாங்கள் எழுதுகிறோம். அவ்வளவுதான். ஒருவித ‘மைனாரிட்டி எழுத்தை’ எழுதுகிறோம், டெலுஸ் என்னும் பிரஞ்சு தத்துவவாதி, பயன்படுத்தும் ஒரு சொல்லாட்சியைப் பயன்படுத்திப் பேசமுடியும்  என்றால்…….

 

  1. பண்பாடுகளுக்குள் புகுந்து எழுதுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: வேறு முறையில் ஹைப்ரிட் (கலப்பு) எழுத்து என்கிறார்கள். அல்லது புலம்பெயர் எழுத்து அல்லது காலனி திரும்பி எழுதுகிறது. தமிழ்ப் பொது வாசகர் களுக்குத் தெரியாத ‘அண்டர்கிரவுண்ட் எழுத்தாளர்கள்’( தீவிரவாதிகள் என்று பொருளில்லை) ஒரு வித ஹைப்ரிட் எழுத்தை எழுதுகிறார்கள். ஏனென்றால் எல்லோரும் மேற்கின் பாதிப்பால் எழுதுகிறார்கள். ரஷ்டி, அல்லது அருந்ததி ராய்க்கு மேற்கினர் இலக்கிய விருது கொடுக்கும்போது மேற்கினர், கிழக்கு நோக்கி வருகிறார்கள். நாமும் மேற்கு நோக்கிப் போகிறோம். அதனால் ‘ஹைப்ரிடிடி’ ஒரு கற்பனை மாதிரியான குணமாக நம்மைக் கவராது போலும். ஆனால் எனக்கு ஸல்மான் ரஷ்டியும் அர்விந்த் அடிகாவும் பிடிக்கின்றன. சில காலம் முன்பு ஒரு விவாதம் நடந்தது. நான் அடிகாவைப் பிடிக்கும் என்றேன். ஏனெனில் அவர், நல்ல அழுத்தமான காற்றை எழுத்தில் தருகிறார். தமிழ்ப் பத்திரிக்கை எழுத்துக்கு மாற்றானது தானே அது; தமிழ்ப் பிராமணப் பெண்கள் வாசித்து இலக்கியச்சூழலை உருவாக்கிய Pulp fiction போன்ற எழுத்துக்கு மலையாளிகள் பைங்கிளி சாகித்தியம் என்பார்கள். அவர்கள், அனைத்திந்திய இலக்கிய விமரிசனத்துக்கு அச்சொல்லைத் தந்தனர்.

 

  1. ஸெஸ்ஸிபிலிட்டி மற்றும் ஐடன்டிடி என்னும் சொற்களை மதிப்பிடுங்கள்.

பதில்: எனக்கு இவ்விரண்டு சொற்களும் தத்தமக்குள் உறவுடையவை தாம். ஸெஸ்ஸிபிலிடி கொடூரமான உலகிலிருந்து உணர்விழக்க வைக்கிறது. மார்க்ஸ், கொடூரமான உலகத்தில் சமயம் ஆறுதல் அளிக்கிறதென்றார். அதே பொருளில் ஸென்லிபிலிட்டி என்பது அடையாளத்துக்கு(ஐடன்டிடி) நிர்தாட்சண்யமில்லாமல் தூண்டி விரட்டுகிறது. இனம், மொழி, தேசம், மதம் அப்படித்தான் வருகின்றன. இலக்கியம் ஸென்ஸிபிலிடி பற்றிப் பேசும்; ஸென்ஸிபிலிடி தனிநபர் சார்ந்தது;  அடையாளம் (ஐடன்டிடி) சமூகவயமானது.முன்பத்திய காலத்தில் ஸென்ஸிபிலிடியை எழுத்தாளர்களுடன் இணைத்துப் பேசுவார்கள். இப்போது அப்படிச் சொல்லமுடியாது. ரோலாண்பார்த், சார்த்தருடைய Commit ment (அதாவது எழுத்தாளன் நன்மையைக் கொண்டுவருகிறான் என்று) என்ற எண்ணத்தை மறுத்தார். ஸென்ஸிபிலிட்டி இலக்கியம் படிக்கும் வாசகர்களுடையது. பார்த், இதை மறுத்து வாசிக்கிறவன் உணர்வுவாதி ஆவதில்லை, அந்த உணர்விலிருந்து தப்பி neutral ஆகிறான் என்றார். ஒரு வாசகன் தன் ஸென்ஸிபிலிட்டியிலிருந்து தப்பி Neutral ஆகிறதுதான் ஒரு படைப்பைப் படிக்கையில் அவன் அடையும் மாற்றம். மோசமான எழுத்தாளர்கள் தம் கருத்தைப் பிரச்சாரம் செய்ய ஏன் முயலகிறார்கள் என்றால் neutral – மனநிலை என்னும் தத்துவ ஸ்தம்பித்தலை அவர்கள் அறிவதில்லை. நான் போராட வேண்டுமா, வேண்டாமா, என்று தேர்வு செய்கையில் அது என் சுயமான தேர்வு. படைப்பாளி கொஞ்சம் ஒளியைப் பாய்ச்சலாம். உண்மையில், வாசகர் பிரதியிலிருந்து வெளியே வருகையில், தீர்மானம் எடுக்கிறார். நான்,  நடிகர்கள் பொது வாழ்க்கையில் ஏழைகளை ஏமாற்றும் ஒரு மொழியிலிருந்து வருகிறேன். நாயகன் வில்லனை அடிக்கிறான். மக்கள் ஏமாறுகிறார்கள். வில்லனை அடிப்பவனை முதலமைச்சராக்குகிறார்கள். எனவே ஸெஸ்ஸிலிபிலிட்டி ஆபத்தானது. நான், அதனை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்கிறேன். அப்படி மறுஉருவாக்கம் பெறும் கருத்து, ஐடன்டிடி (அடையாளம்); தமழில் உள்ள புலம்பெயர் எழுத்தும் அடையாள எழுத்து. தமிழில் இது இன்று முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>